போதைப்பொருள் விற்ற தம்பதி கைது

சென்னை: காசிமேடு காசிபுரத்தில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்த  காசிபுரம், ஏ-பிளாக் பகுதியை சேர்ந்த நீலாவதி (58), அவரது கணவர் ஆறுமுகம் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* பழைய வண்ணாரப்பேட்டை அஜித் முகமது கவுஸ் சாலையை சேர்ந்த கல்லூரி மாணவி ஷிபாயா (17) நேற்று வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள்,  இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

* அசாம் மாநிலத்தை சேர்ந்த உதுப்தி தெங்கல் (20) என்பவர், சென்னை காரப்பாக்கம் பகுதியில் தங்கி, ஐ.டி. நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி இவரை வழிமறித்து கத்தி முனையில் செல்போன் மற்றும் ₹4 ஆயிரத்தை பறித்து சென்ற செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த சுரேஷ் (24), சிவா (23), விக்னேஷ் (23) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

* பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், முருகவேல் (36) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், சிகரெட், பீடி கட்டுகள், ₹7 ஆயிரத்தை திருடி சென்றனர்.

* கோயம்பேடு சீனிவாச நகர் 2வது தெருவில் உள்ள ஸ்ரீசித்திபுத்தி விநாயகர் கோயில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

* கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாமுவேல் (22) என்பவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற டிரஸ்ட்புரத்தை சேர்ந்த கார்த்திக், ஐயப்பன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

* எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (29), நேற்று அதே பகுதியில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

* எழும்பூர் ரயில்வே குடியிருப்பு பி.எச். சாலையை சேர்ந்த கணேசன் (46), எழும்பூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், சரமாரி தாக்கி அவரிடம் இருந்த ₹2500 மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

* வில்லிவாக்கம் அடுத்த ராஜமங்கலம் தாதங்குப்பத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் வீட்டில் ஒரு பைக், அதே பகுதியை சேர்ந்த கமல் என்பவரின் வீட்டில் ஒரு லேப்டாப், ஒரு செல்போன், ₹10 ஆயிரம், தேவி கருமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து ₹14 ஆயிரம் ஆகியவற்றை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதேபால், சுரேஷ் மற்றும் சித்ரா ஆகியோரின் வீடுகளில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால், முடியாததால் தப்பி சென்றுள்ளனர்.

* சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (18), நேற்று அதிகாலை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோ ஒன்றில் வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜெய்நகர் பார்க் அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த 3 பேர், ஆட்டோவை வழிமறித்து, கத்தி முனையில், லட்சுமணன் பையில் இருந்த 3,500 ரூபாயை பறித்து சென்றனர்.

 

பஸ் மீது பைக் மோதி 2 மாணவர்கள் சீரியஸ்

விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன்குமார் (14), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது உறவினர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (18). இவர், காட்பாடியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, விருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சரவணன் வந்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தர்ஷன்குமார், சரவணன் ஆகிய இருவரும் ஒரு பைக்கில் கோயம்பேடு காளிம்மாள் கோயில் ஏ- ரோடு வழியாக சென்றனர்.

அப்போது, சாலையோரத்தில் நின்றிருந்த அரசு பேருந்து மீது இவர்களது பைக் வேகமாக மோதியது. இதில் தர்ஷன்குமார், சரவணன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, தலையில் படுகாயமடைந்தனர். போலீசார், சரவணனை மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தர்ஷன்குமாரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: