மும்பை: மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவான தீவிரவாதி ஜலீஸ் அன்சாரி நேற்று கான்பூரில் கைது செய்யப்பட்டான். ‘மிஸ்டர் பாம்’ என்று பெயர் பெற்ற ஜலீஸ் அன்சாரி (68) ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்பு, மாலேகாவ் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சுமார் 50 குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்டவன். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஜ்மீர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். இவன். மும்பை, அக்ரிபாடாவில் உள்ள மொமிம்புராவை சேர்ந்தவன். தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் 21 நாள் பரோல் அளித்ததை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தான். அவன் பரோல் முடிந்ததால், நேற்று காலை சிறைக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவன் மாயமாகி விட்டதாக அக்ரிபாடா காவல் நிலையத்தில் அவனுடைய குடும்பத்தினர் ஜனவரி 16ம் தேதி புகார் அளித்தனர்.