புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கேரளாவை ஒட்டியுள்ள மாகே பிராந்தியத்துக்கு கவர்னர் கிரண்பேடி 2 நாள் பயணமாக சென்றார். நேற்று அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டமும் நடத்தினார். மாகேவில் உள்ள மகாத்மா காந்தி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க கிரண்பேடி மதியம் சென்றார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் சிலர் திரண்டு கோஷம் எழுப்பினர். மேலும், மாணவர்களில் சிலர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்த முயன்றனர். கோ பேக், கோ பேக் (திரும்பிப்போ) என முழக்கம் எழுப்பினர். கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சி பகுதிக்கு போலீசாரின் தடுப்பை மீறி மாணவர்கள் செல்ல முயன்றனர். அப்போது மாணவர்களை போலீசார் காலால் எட்டி உதைத்தும், தடியடி நடத்தியும் தாக்கினர்.