ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. புகழ்பெற்ற இம்முகாமில் 2 குட்டிகள் உட்பட ெமாத்தம் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்குள் உலா வரும் காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டுவது உள்ளிட்ட பணிகளில் இங்குள்ள கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று மாட்டு பொங்கலையொட்டி முதுமலை தெப்பகாட்டில் பொங்கல் விழா நடந்தது. யானைகள் குளிக்க வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. தொடர்ந்து யானைகளுக்கு சிறப்பு உணவாக கரும்பு, வெல்லம், பழங்கள், தேங்காய் இவற்றுடன் வழக்கமான உணவுகளும் வழங்கப்பட்டன.