சிட்னி: ஆஸ்திரேலியாவில் புதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காததால் விரக்தியில் இருந்த மக்களுக்கு, தற்போது பெய்து வரும் மழையால் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் கடும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமானதுதான். ஆனால், அந்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்தாண்டுதான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பல மாதங்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. அதாவது, ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 100 கோடி விலங்குகள் பலியாகி இருக்கின்றன. 2,000 வீடுகள் எரிந்து தரை மட்டமாகின. ஒரு கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு சேதம் அடைந்தது.