ஸ்ரீநகர்: குடியரசு தினத்தை முன்னிட்டு பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் அரசு தீவிரமாக உள்ளது. அதேபோல், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு குடியரசு தின விழாவை சீர்குலைக்க பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியரசு தினத்தையொட்டி பயங்கர தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருந்த 5 பேர், 2 வெவ்வேறு நாட்களில் கைது நேற்று செய்யப்பட்டனர். ஸ்ரீநகரில் உள்ள ஹஷ்ரத்பால் பகுதியில் கடந்த 8ம் தேதி கையெறி குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் சிலர் காயம் அடைந்தனர். இது தொடர்பான தேடுதல் வேட்டையில் சந்தேகத்திற்குரிய இரு நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் அஜாஷ் அகமது ஷேக் என்பதும், டிரைவராக பணியாற்றியதும் தெரிய வந்தது. மற்றொருவர் உமர் அமித் ஷேக். தெரு வியாபாரி. தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இம்தியாஷ் அகமது சில்கா. விளையாட்டு பொருட்கள் கடை உரிமையாளர். மற்றொருவர் தனியார் நிறுவன ஊழியர் ஷகில் பருக் கோஜ்ரி, மேலும் ஒருவர் வியாபாரி நசீர் மிர் என தெரியவந்துள்ளது. அவர்கள் 5 பேரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என மத்திய காஷ்மீர் பகுதி டிஐஜி பிர்டி தெரிவித்தார். இவர்களுக்கு கடந்த நவம்பர் 26ம் தேதி காஷ்மீர் பல்கலைக் கழகம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் தொடர்பு இருப்பதும், அவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் குடியரசு தினத்தை சீர்குலைக்க நடத்த இருந்த மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டதாகவும் டிஜஜி தெரிவித்தார். அவர்கள் 5 பேரிடம் இருந்து வெடிபொருட்கள் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், பேட்டரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.