ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்க பெண் கவுன்சிலரின் கணவரை வெட்டி கொல்ல முயற்சி: கூலிப்படையை சேர்ந்த 4 பேர் கைது

சென்னை: திருவாலங்காட்டில் ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்கும் போட்டியில், அதிமுக பெண் கவுன்சிலர் கணவரை முயன்ற கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக - 6, அதிமுக - 8, பாமக - 1, பாஜ - 1 இடங்களில் வெற்றி பெற்றன. இங்கு ஒன்றிய குழு தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஆளுங்கட்சியில் ஒன்றிய பொறுப்பில் நிர்வாகியாக இருந்து வருபவரின் உறவினர் மேனகாவும், முன்னாள் எம்பியின் தம்பி மனைவி ஜீவா ஆகியோரும் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த பதவியை பிடிப்பதில் இவர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி நடைபெற இருந்த ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் போதிய கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவாலங்காடு அருகே கண்டிகை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரையில் 4 மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்துள்ளனர். இதை பார்த்த கிராம மக்கள், விரைந்து சென்று, மர்ம கும்பலை சுற்றி வளைத்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால், அவர்களை அடித்து உதைத்து திருவாலங்காடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள், திருவாலங்காடு அருகே ராஜபத்மநாபபுரம் காலனியை சேர்ந்த விஷ்ணு (20), நிதிஷ்குமார் (19), திருவள்ளூர் அருகே பெரும்பாக்கத்தை சேர்ந்த ஐயப்பன் (22), அப்துல் ரசாக் (19) என தெரிந்தது.

மேலும், திருவாலங்காட்டில் ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிப்பதில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதனால் ஒரு தரப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் அறிவுறுத்தலுடன், மற்றொரு தரப்பை சேர்ந்த ஆளுங்கட்சியின் பெண் கவுன்சிலரின் கணவரை கொல்வதற்காக வந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories: