பெங்களூரு: ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர், மனம் நலம் பாதி்க்கப்பட்ட தனது மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு ஜே.பி நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (61). ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் ஓய்வு பெற்ற அவர் பெங்களூரு ஜே.பி நகரில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ராதா கிருஷ்ணா (31) என்ற மகன் உள்ளார். ராதா கிருஷ்ணா மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
பல்வேறு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதனால் ராஜகோபால் மிகவும் மனம் நொந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று ராஜகோபால் தனது மகனுடன் சிட்டி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு பயணிகள் ஓய்வு அறையில் இருவரும் தங்கினர். அப்போது ராஜகோபால் தனது மகனுக்கு குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த சில நிமிடத்தில் மகன் கிருஷ்ணா உயிரிழந்தார். இதையடுத்து ராஜகோபாலும் அதே குளிர்பானத்தை குடித்தார்.