டெல்லி: பழங்குடியினரின் உரிமைகள் காக்கப்படும் என மோடி உறுதியளித்தார் என்று பிரதமரை சந்தித்த பின் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் கடந்த மாதம் பதவியேற்றார். அவருக்கு மாநில கவர்னர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்று மாலை சந்தித்தார். ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். வரவிருக்கும் நாட்களிலும் பிரதமர் மோடியை சந்தித்து மாநில அரசின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளை முன் வைப்பேன். பழங்குடியினரின் உரிமைகள் காக்கப்படும் என மோடி உறுதியளித்தார். ஏற்கனவே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த வாரம் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.