புதுடெல்லி: ‘அசாமில் பொதுமக்கள் கோபமாக இருப்பதால்தான், கடந்த முறை கூட பிரதமர் மோடி மாநிலத்தை பார்வையிட வரவில்லையா?’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு-2020 தொடங்குகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அசாம் பாஜ செய்தி தொடர்பாளர் ரூபாயம் கோஸ்வாமி, மோடியின் கவுகாத்தி வருகை இன்னும் உறுதியாகவில்லை என்று கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரதமர் மோடியின் அசாம் வருகை தள்ளி வைக்கப்படுவது இது 2வது முறையாகும். ஏற்கனவே இங்கு நடக்க இருந்த இந்தோ-ஜப்பான் ஆண்டு மாநாடு, போராட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.