திருச்சியில் சம்பா அறுவடை பணிகள் தீவிரம்: நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருச்சி:  காவிரி டெல்டா கடைமடைப் பகுதியில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியிருப்பதால் நேரடி நெல்கோள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 11 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 1லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது.  எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு மேட்டூர் ஆணை 5 முறை நிரம்பியதால் சம்பா சாகுபடி நல்லநிலையில் அதிக விளைச்சலுடன் உள்ளது. தற்போது டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் அறுவடைப் பணி பல்வேறு இடங்களில் தொடங்கியுள்ளது.

அறுவடைப் பணி தொடங்கிய நிலையில் இதுவரை தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.  எனவே தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் ஒரேநேரங்களில் அனைத்து இடங்களிலிலும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டுமென கடைமடை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தங்களது கோரிக்கை நிறைவேறினால் மட்டுமே, கடைமடை விவசாயிகள் உழவர் திருநாளான பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: