பரமக்குடி: பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பரமக்குடியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் தினத்தன்று மாவிலை தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, மஞ்சள் கொத்துகள் கட்டிய பானையில், புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பரமக்குடி அருகே வைகை ஆற்றின் வடகரையில் உள்ளது மஞ்சள்பட்டினம். இங்குள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் கொத்துக்கள் சாகுபடி செய்வது வழக்கம். மஞ்சள்பட்டினம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். ஆறு மாத பயிரான மஞ்சள் பயிர் பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.