சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் தற்காலிக பணியாளர்களை புதிதாக நியமனம் செய்ய தடை விதித்து முதன்மை தலைமைப் பொறியாளர் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாக நீர்வளப்பிரிவில் 4560 பேரும், கட்டுமான பிரிவில் 2,550 பேரும் நியமனம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 4567 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக 7 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊதியத்தை உயர்த்த கோரிக்கை வைத்தனர். இதையேற்று தற்காலிக பணியாளர்களுக்கு ஊதிய வரன்முறை செய்து தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின் படி தகுதியான பட்டியலில் இடம்பிடித்தவர்களுக்கு மாதம் தலா ₹18 ஆயிரம் ஊதியம் கிடைக்கலாம். தொடர்ந்து தகுதியான தற்காலிக ஊழியர்களின் பட்டியல் அந்தந்த கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களுக்கு மறு ஒதுக்கீடு ஆணை வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.