ஆத்தூர்: சேலம் அருகே அதிமுக பிரமுகர் தலையீட்டால் தேர்தல் முடிவை மாற்றியதாக கூறி, பிடிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்றனர். சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ளது களரம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கான தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த வெண்ணிலா, அதிமுகவை சேர்ந்த மகாலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் வெண்ணிலா 463 வாக்குகளும், மகாலட்சுமி 435 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து 28 வாக்குகள் வித்தியாசத்தில் வெண்ணிலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல மணி நேரமாகியும் வெற்றி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுடன் சென்று வெண்ணிலா, தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது, மகாலட்சுமி 6 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். அந்த 6 ஓட்டு எப்படி கூடுதலாக வந்தது என்ற கேள்விக்கு முறையான பதில் இல்லை. இதனால் ஆவேசமடைந்து கோஷமிட்டனர். போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.