திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கியது. 41 நாட்கள் நடந்த மண்டல காலம் கடந்த 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து அன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. 28, 29, ஆகிய தேதிகளில் நடை சாத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.