மெல்பர்ன்: பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வலுவான எண்ணிக்கையை எட்டியுள்ள நிலையில் நியூசிலாந்து தடுமாற்றத்துடன் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான ஐசிசி உலக கோப்பை தொடரின் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடக்கிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து 2வது நாளான நேற்று களத்தில் 77 ரன்னுடன் களத்தில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 85ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 284ரன். அதனையடுத்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், கேப்டன் டிம் பெயின் இருவரும் பொறுப்பாக விளையாடினர். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 150 ரன் சேர்த்தனர். டிம் பெயின் 79 ரன் எடுத்திருந்த போது, அவரை வாக்னர் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினர். அதன் பிறகு வந்தவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சதமடித்த டிராவிஸ் 114 ரன்னில் வெளியேறினார். அதனால் ஆஸ்திரேலியா 155.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 467 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.