கொல்கத்தா: ரஞ்சி போட்டியின் போது வீரர்கள் எதிர்ப்பு காரணமாக, அவர்களது அறையில் இருந்த பிசிசிஐ தேர்வாளர் தேவாங் காந்தி வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்கால்-ஆந்திரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கிறது. போட்டியின் 2வது நாளான நேற்று பெங்கால் வீரர்களின் உடை மாற்றும் அறைக்கு பிசிசிஐ தேர்வாளர் தேவாங் காந்தி சென்றுள்ளார். அவர் அறைக்குள் இருப்பது பிசிசிஐ ஊழல் தடுப்பு விதிகளுக்கு எதிரானது என்று வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த விதியின்படி வீரர்களின் அறைக்கு வீரர்கள், அணியின் ஊழியர்கள் மட்டுமே செல்ல முடியும். எனவே இது குறித்து வீரர்களின் சார்பில் அணியின் மூத்த வீரர் மனோஜ் திவாரி உடனடியாக பெங்கால்-ஆந்திரா போட்டிக்கான பிசிசிஐ-ன் ஊழல் தடுப்பு அலுவலர் சவுமென் கர்மக்கரிடம் புகார் செய்தார்.