தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுகவினரை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியம் அந்தேவனப்பள்ளி ஊராட்சி 21வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, திமுக சார்பில் மஞ்சுளாமூர்த்தியும், அதிமுக சார்பில் சிவகாமி மாதேஷ் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அந்தேவனப்பள்ளி ஊராட்சி செயலாளர் சீனிவாசன் தலைமையில், அதிமுகவினர் அந்தேவனப்பள்ளி கிராமத்தில் வீடு, வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்துள்ளனர். இதை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை.