திருச்சூர்: கேரளாவில் உள்ள கல்லூரியில் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக கருத்தரங்கம் நடத்தும் விவகாரத்தில் ஏ.பி.வி.பி-எஸ்.எஃப்.ஐ. மாணவ அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் ஸ்ரீ கேரளா வர்மா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் பா.ஜ.க. மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக கருத்தரங்கம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இடதுசாரி எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி வளாகத்திற்குள் கருத்தரங்கை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரி வளாகத்துக்கு வெளியே சாலையோரத்தில் கருத்தரங்கை நடத்த நடவடிக்கை மேற்கொண்ட போது மோதல் வெடித்தது. ஏபிவிபி மாணவர் ஒருவரை கும்பலாக சேர்ந்து எஸ்.எஃப்.ஐ மாணவர் அமைப்பினர் விரட்டி விரட்டி தாக்கினர். இதையடுத்து அவர்களை பேராசிரியர்கள் தடுத்து நிறுத்தினர்.