திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டதால் 14 மணி நேரத்துக்கும் மேல் நீண்ட வரிசையில் காத்து நின்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நடை திறந்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் நேற்று முன்தினம் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு பம்பை வந்த பக்தர்கள் மாலை 5 மணிக்கு பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. சுமார் 14 மணி நேரத்திற்கு மேல் அவர்கள் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. சரங்குத்தி, நீலிமலை உள்ளிட்ட பகுதிகளில் வரிசையில் நின்ற பக்தர்கள் உண்ண உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். அவர்களுக்கு சுக்கு தண்ணீர் மட்டும் கிடைக்கிறது. வரிசையை விட்டு வெளியே சென்று உணவு வாங்கவும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல பக்தர்கள் வரிசையில் மயங்கி விழுந்தனர். பல பகுதிகளில் நெரிசல் காரணமாக பக்தர்கள் கடுமையாக அவமதிப்பட்டனர்.
ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் பக்தர்களின் வருகை அதிகரித்ததை ெதாடர்ந்து அனைத்து பக்தர்களும் ஒரே வரிசையில்தான் செல்ல முடிந்தது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து போலீசார் பம்பை உள்பட பல்வேறு பகுதிகளில் பக்தர்களை தடுத்து நிறுத்தி குழு குழுவாக அனுப்பி வைத்தனர். ஒரு மணி நேரத்திற்கு பம்பையில் இருந்து சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 18ம் படியில் ஒரு நிமிடத்தில் அதிகபசட்மாக 100 பக்தர்கள் வரை ஏறி செல்கின்றனர். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
100 கோடி வருமானம்சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து இந்த மண்டல காலத்தில் நடை திறந்து நேற்று முன்தினம் வரை 27 நாட்களில் மொத்த வருமானம் 100 கோடியை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் 60 கோடி மட்டுமே கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 40 கோடிக்கு மேல் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.