சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மணிப்பூர் முதல்வர் சகோதரர் துப்பாக்கி முனையில் கடத்தல் : 15 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது

கொல்கத்தா: கொல்கத்தாவில் தங்கியிருந்த மணிப்பூர் முதல்வரின் சகோதரரை மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்று ₹15 லட்சம் கேட்டு மிரட்டினர். மணிப்பூர் முதல்வராக உள்ள பைரான் சிங்கின் சகோதரர் தோங்க்பரம் லூகோய் சிங். இவர் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள நியூ டவுன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் பகலில் இவரது வீட்டுக்குள் 5 பேர் கும்பல் திடீரென நுழைந்து சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மிரட்டியது. பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரையும், அவரது நண்பர் ஒருவரையும் கடத்தி சென்றனர். பின்னர், அந்த கும்பல் லூகோய் சிங்கின் மனைவிக்கு போன் செய்து 15 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி மத்திய கொல்கத்தாவின் பெனியாபுகுர் பகுதியில் இருந்து லூகோய் சிங்கை ஒரு சில மணி நேரங்களில் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களில் இருவர் மணிப்பூர், ஒருவர் கொல்கத்தா, மற்றொருவர் பஞ்சாப்பை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனங்கள், 3 பொம்மை துப்பாக்கி மற்றும் ₹2 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர். விசாரணையில் மணிப்பூரில் உள்ள ஒருவர் பணம் தருவதாக கூறியதன் பேரில் முதல்வரின் தம்பியை கடத்தியது தெரியவந்துள்ளது.

Related Stories: