நியூ சவுத் வேல்ஸ்: கிழக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழந்திருக்கலாம் என சூழலியல் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த ஒரு மாதமாக புதர் தீ எரிந்து வருகிறது. கொழுந்து விட்டு எரியும் இந்தத் தீ அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் பரவி, பல லட்சம் ஹெக்டேர் அளவிலான பகுதிகள் தீயில் பற்றி எரிகின்றன. இந்த தீயில் சிக்கி இதுவரை சுமார் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து, இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பல லட்சம் மரங்கள் கருகிவிட்டன. இதுவரை இல்லாத வகையில் சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் தீயானது அபாய அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.