லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவர் ஜான்டி பிரேவரி. இவனுக்கு தற்போது 18 வயது. இவன் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய பதிவுகளை போடுவது வழக்கம். இவன் கடந்த ஆகஸ்ட் மாதம் டேட் மாடர்ன் அருங்காட்சியகத்துக்கு சென்றுள்ளார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், அங்கு வந்திருந்த பிரான்ஸ் பெண் சுற்றுலா பயணியின் 6 வயது ஆண் குழந்தையை ஜான்டி தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான். இதைப்பார்த்து, அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டு துரத்தி உள்ளனர். ஆனால், யாரிடமும் பிடிபடாமல் ஓடிய ஜான்டி, அருங்காட்சியகத்தின் 10வது மாடிக்கு சென்று அங்கிருந்து குழந்தையை தூக்கி வீசியுள்ளான். இதில் அந்த குழந்தை 5வது மாடியின் கூரை மீது விழுந்து படுகாயமடைந்தது. மேலும், உடல் முழுவதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இன்னமும் அக்குழந்தை தீவிர சிகிச்சையில் உள்ளது. அக்குழந்தை அசையவோ, திரும்பி படுக்கவோ கூட முடியாத நிலை உள்ளது.