திண்டுக்கல்: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை ‘எலைட்’ பி பிரிவு லீக் ஆட்டத்தில், கர்நாடகா 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன் குவித்துள்ளது. என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (4 நாள் ஆட்டம்), டாசில் வென்ற கர்நாடகா அணி கேப்டன் கருண் நாயர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். மயாங்க் அகர்வால், தேகா நிஷ்சல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். நிஸ்சல் 4 ரன் மட்டுமே எடுத்து விக்னேஷ் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, கர்நாடகாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.அடுத்து மயாங்க் அகர்வாலுடன் தேவ்தத் படிக்கல் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தனர். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகர்வால் 43 ரன் எடுத்து (78 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) சித்தார்த் பந்துவீச்சில் அபராஜித் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் கருண் நாயர் 8 ரன் எடுத்து ரன் அவுட்டாக, கர்நாடகா 88 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.