கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த நடுக்குப்பதில் ஊராட்சிமன்ற தலைவர் பதவி 50 லட்சத்துக்கும், ஊராட்சிமன்ற துணை தலைவர் பதவி 15 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதை தொடர்ந்து தற்போது இது குறித்து விசாரணை நடத்துமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இந்த பஞ்சாயத்தில் சுமார் 1,900 ஓட்டுகள் உள்ளன. மொத்தம் 8 வார்டுகள் உள்ள இந்த கிராம பஞ்சாயத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவித்த உடனேயே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் என்பவர், தனக்கு தான் தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் என ஊர் மக்களிடம் கேட்டுள்ளார். அதையும் மீறி யாராவது போட்டியிட்டால், அவர்களை தாக்குவேன் என அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் பதிவிக்கான ஏலம், நடுக்குப்பம் பகுதியில் உள்ள கோவிலில் இன்று நடைபெற்றது. அந்த ஏலத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தருவதாக அதிமுக-வை சேர்ந்த சக்திவேல் மற்றும் தேமுதிகவை சேர்ந்த முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.