காரைக்கால்: காரைக்காலை அடுத்த கீழகாசாகுடி மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து சுனாமி நகர், காஞ்சிபுரம் கோயில் பத்து ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை பள்ளி சாலை என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால் இந்த சாலைக்கு இந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இந்த மரங்கள் சாலையை ஆக்கிரமித்து காணப்படுவதால் இவ்வழியே செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, பள்ளி ரோடு என்ற இந்த சாலையின் ஓரமாக சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. மழை நேரங்களில் சீமைக்கருவேல மரங்கள் சாய்ந்து சாலையை ஆக்கிரமித்து விடுகின்றன. இதன் காரணமாக வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனை உடனடியாக அகற்றாவிட்டால் சீமைக்கருவேல மரங்கள் சாலையை முழுமையாக ஆக்கிரமித்து விடும். அரசு இதனை கவனத்தில் கொண்டு விரைவாக மரங்களை அகற்ற வேண்டும் என்றனர்.