மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உச்சுவாடி கிராமத்தில் வெண்ணாற்றில் குறுக்கே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தரைப்பாலம் ஒன்று பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலத்தை வடபாதி மங்கலம், அரிச்சந்திரபுரம், உச்சுவாடி வடக்கு தெரு, பெரியகொத்தூர், ராமநாதபுரம், சேந்தன்குடி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள், கிராம மக்கள், விவசாயிகள் இந்த பாலத்தின் வழியாக செல்ல வேண்டும். தர மில்லாமல் கட்டப்பட்டதாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் இப்பாலத்தின் மைய பகுதியில் உள்ள தரைத்தளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இடிந்து ஆற்றில் விழுந்து விட்டது. இதனால் பாலத்தின் நாடு பகுதிக்கு செல்ல முடியாமலும் மக்கள் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற வகையிலும் தற்போது உள்ளது. பாலத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்ததும் அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுவரை பலனில்லை.