புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி, பாபர் மசூதி விவகாரத்தில் கடந்த மாதம் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில் `சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும், அதற்கு பதிலாக பாபர் மசூதி கட்ட அயோத்தியில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதித்த தீர்ப்பை எதிர்த்து ஜமியத் உலாமா இ இந்த் அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகள் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து ஜமியத் உலாமா இ இந்த் அமைப்பின் தலைவரும் அயோத்தி நில வழக்கின் மூல மனுதாரரான எம்.சித்திக்கின் வாரிசுமான மவுலானா சயீத் ஆசாத் ரஷிடி உச்ச நீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு தாக்கல் செய்தார்.