வைகுண்டம்: செய்துங்கநல்லூர் முதல் குரும்பூர் வரை விபத்தினை தவிர்க்க 10 அபாய வளைவு சூரிய விளக்குகளை சாலையோரங்களில் போலீசார் அமைத்துள்ளனர். நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் குறுகிய பாலங்களும், அபாயகரமான பல வளைவுகளும் உள்ளன. இதனால், கடந்த காலங்களில் நடைபெற்ற விபத்துக்களில் பல்வேறு உயிரிழப்புகளும் .உடலுறுப்பு மற்றும் பொருட்சேதங்களும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஏற்பட்டுள்ளன. வளைந்த நிலையில் உள்ள சாலைகளால் திருச்செந்தூர் முருகன் கோயிலிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் முருகர் பக்தர்களுக்கும் சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருங்குளம் அருகேயுள்ள குறுகிய பாலத்தில் வேன் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர். அப்போது, விபத்தில்லா பயணத்திற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணியும் பெண்களின் பாதுகாப்பை மற்றும் சாதி ரீதியான தகராறுகளை தடுக்கும் விதமாகவும் பஸ் மார்ஷல் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது.ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி அருகேயுள்ள புதிய தாலுகா அலுவலகம் முன்பு கடந்த வாரம் திடீரென வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட விபத்தினை தொடர்ந்து உடனடியாக வாகனங்களின் வேகத்தை குறைக்கும் விதமாக தடுப்பினை காவல் துறையினர் ஏற்படுத்தினர். இதனால், தொடர் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.