மகாராஷ்டிராவில் தனது சித்தப்பா சரத் பவாரை ஏமாற்றிவிட்டு, தேசியவாத கட்சி எம்எல்ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை யாரும் எதிர்பாராத வகையில் பாஜ.விடம் கொடுத்து துணை முதல்வர் பதவியை பெற்றவர் அஜித் பவார். இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து அவரை சரத் பவார் நீக்கினார். கட்சிக்கு அஜித் பவார் துரோகம் இழைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். அஜித் பவார் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மகாராஷ்டிராவில், பாஜ-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்கும். எனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருந்து மாநில மக்களின் நலன் காக்க பாடுபடுவேன் என்று பிரதமருக்கு உறுதி அளிக்கிறேன். நான் இப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் நீடிக்கிறேன். என்னுடைய தலைவர் சரத்பவார் தான். இதில் எந்த மாற்றமும் இல்லை,’ என்று கூறியுள்ளார்.