சேலம் : சேலம் அருகே பெற்றோரால் ₹3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டு தரக்கோரி, காதல் திருமணம் செய்த இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் ஆட்டையாம்பட்டியை அடுத்த நைனாம்பட்டியைச் சேர்ந்த மீனா என்பவர், தனது கணவர் ராஜாவுடன் வந்து மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து மீனா கூறியதாவது: நானும், உறவினரான ராஜாவும் காதலித்து வந்தோம். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2017 நவம்பரில் திருப்பூர் பெருமாநல்லூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். தொடர்ந்து, திருப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தோம்.
கடந்த ஜூன் மாதம் எனக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இதுகுறித்து சேலத்தில் உள்ள எனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.