திருவையாறு: மயிலாடுதுறை, திருவையாறில் இன்று கடைமுழுக்கு விழா நடந்தது. இதையொட்டி சுவாமிகள் தீர்த்தவாரியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர். துலா மாதம் என்னும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரியில் நீராடினால் புண்ணியம் என்பது ஐதீகம். இதன் முதல் நாளான 1ம் தேதி திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை காவிரியில் முதல் முழுக்கு நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடினர். இன்று ஐப்பசி கடைசிநாள் என்பதால் இதை கடை முழுக்கு என கொண்டாடுகிறார்கள். இதையொட்டி இன்று தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் கடைமுழுக்கு விழா நடந்தது. இதற்காக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவையாறு வந்து காவிரியில் நீராடி, ஐயாறப்பரை தரிசித்தனர்.