திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் பள்ளி வளாகம், பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியில் வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, திருவள்ளூர் அடுத்த ஈக்காடு ஒன்றிய அலுவலக வளாகத்தில், 10 ஆயிரம் புங்கன், 35 ஆயிரம் புளியன், 25 ஆயிரம் வேம்பு என மொத்தம் 70 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, நடவு செய்யப்பட்டது. இதற்கென வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு செடி வளர்ப்புக்கு தோட்ட கலை துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், செடி தயாரிப்புக்கு தேவையான உரம் மற்றும் பாலித்தீன் பைகள், பசுமை குடில் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், மரக்கன்றுகள் வளர்க்க கூலித்தொகையும் ஒதுக்கப்பட்டது.