வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் பெய்யும் தொடர்மழையால், பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு, சனிப்பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை, கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் சனிப்பிரதோஷத்தையொட்டி அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர். இதில், பலர் அன்று தரிசனம் முடித்து, பிற்பகலில் பாதுகாப்பாக தாணிப்பாறை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர். மாலை 4.30 மணியளவில் திடீரென சதுரகிரி மலைப்பகுதிகளில் பலத்த மழை கொட்ட துவங்கியது. இதையடுத்து, கோயிலில் இருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். மழை பெய்வதற்கு முன்பு கோயிலிலிருந்து தாணிப்பாறை அடிவாரத்துக்கு கிளம்பிய 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், சங்கிலிப்பாறை பகுதியில் சிக்கிக் கொண்டனர். அப்பகுதி ஓடைகள். காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அவர்களால் கடந்து வர முடியவில்லை.