புதுச்சேரி, உச்சநீதிமன்ற நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் சனாதன கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாடு புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று மாலை நடந்தது. புதுச்சேரி காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், விசிக பொதுச்ெசயலாளர்கள் ரவிக்குமார் எம்பி, சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி பங்கேற்று நிறைவு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மக்களுக்கு எதிராக இருக்கிறது. இதற்கு முன்பு கல்வி மாநில பட்டியலில் இருந்தது. இப்போது மத்திய பட்டியலுக்கு மாறுகிறது. இதன்மூலம் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு கை வைக்கிறது. புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியாவில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை குறையும். இடைநிற்றல் அதிகரிக்கும். அனைவருக்கும் கல்வி அளிப்பதே ஜனநாயகம். குறிப்பிட்டோருக்கு கல்வி மறுப்பது சனாதானம். நாட்டில் கல்வியை மேம்படுத்த வேண்டும். கல்விக்கூடங்களின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.