கோபி: கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பை ஆய்வு செய்ய வந்த ஈரோடு மாவட்ட கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் கீழ்பவானி வாய்க்காலில் சத்தியமங்கலத்தை அடுத்த சுள்ளிமேடு என்ற பகுதியில் கரை உடைந்தது. இதனை தொடர்ந்து கோபியை அடுத்த சின்ன பீளமேட்டில் 90 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. வீடுகளில் இருநதவர்களை காவல்துறையினர் உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்து வெளியேற்றியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் அங்கு இருந்த 4 ஆடுகள் 2 பசு மாடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அதேபோல வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் உள்ளது. அந்த டவரில் சுமார் 8 அடி உயரத்திற்கு முழு வேகத்துடன் தண்ணீர் சென்றதால் டவரின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு மின் கோபுரம் கீழே விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரியத்துறை தொழில்நுட்ப பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மின் கோபுரம் கீழே சாயாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.