திருவொற்றியூர்: மணலி மண்டலம், 16வது வார்டுக்குட்பட்ட சடையங்குப்பம், பர்மா நகரில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் காலி நிலம் உள்ளது. இவற்றில் ஒரு பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமித்து போலியான ஆவணங்கள் தயாரித்து, அதில் தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்களை கட்டி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சடையங்குப்பம், பர்மா நகர் பகுதியில் சுமார் 2.5 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன், தனியார் ஒருவர் ஆக்கிரமித்து அதில் சுற்றுச்சுவர் எழுப்பினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அரசு நிலத்தில் விதிமீறி மதில் சுவர் கட்டக் கூடாது, என்று தடுத்து நிறுத்தினர். அப்போது தங்களிடம் ஆவணம் உள்ளது என்று சம்பந்தப்பட்ட தனியார் நபர், அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதற்கு உரிய ஆவணங்கள் இருந்தால் அதை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதுவரை எந்த கட்டுமானமும் செய்யக்கூடாது என்று தெரிவித்தனர்.