திருமலை: தெலங்கானா மாநிலத்தில் தாசில்தாரை எரித்துக் கொன்ற வழக்கில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், அப்துள்ளப்பூர்மெட் தாசில்தார் விஜயா ரெட்டி தனக்கு சொந்தமான பிரச்னைக்குரிய 7 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்காததை கண்டித்து, கவுரெலி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தாசில்தார் அலுவலகம் சென்று கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், பெட்ரோல் ஊற்றி தாசில்தார் விஜயாவை கொலை செய்தார். இதில் தாசில்தாரை காப்பாற்ற முயன்ற டிரைவர் குருநாதம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 65 சதவீதம் தீக்காயங்களுடன் உஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குற்றவாளி சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.