புதுடெல்லி: ‘‘மதுரை அழகர் கோயில் மலை தமிழக அரசின் வனத்துறைக்கு சொந்தமானது’’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுரையில் இருந்து வடக்கே 20 கிமீ தூரத்தில் உள்ளது பிரசித்திப் பெற்ற அழகர் கோயில். வைணவத் தலமான இக்கோயில் அமைந்துள்ள வனப்பகுதி அழகர் மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலைப்பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழக அரசின் வனத்துறை அறிவித்துள்ளது. இதனால், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ள முடியாது என்பதால், ‘அழகர் மலை எங்களுக்கே சொந்தம்’ என்று கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, கடந்த 2014ல் அளித்த தீர்ப்பில், ‘அழகர் மலை கோயில் நிர்வாகத்திற்கே சொந்தம்’ என உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.