பொள்ளாச்சி அருகே வாகன சோதனை பைக் மீது போலீசார் லத்தி வீச்சு கோவை வாலிபர் 3 பேர் காயம்: பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே தென்சங்கம்பாளையம் பகுதியில் கோட்டூர் எஸ்.ஐ. சம்பந்தம் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் 3 பேர் வந்துள்ளனர்.  இதை பார்த்த போலீசார் பைக்கை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் அவர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. உடனே போலீஸ்காரர் ஒருவர் லத்தியை பைக் மீது வீசியுள்ளார். இதனால், பைக் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில், பைக்கில் வந்த கோவை போத்தனூரை சேர்ந்த சென்பார் (18), குனியமுத்தூரை சேர்ந்த அப்சல் (17). சர்தார் (25) ஆகியோர் படுகாயமடைந்தனர்.   

இதையடுத்து காயமடைந்த 3 பேரையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இது குறித்து கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.    இதற்கிடையே, விபத்து நடந்த இடத்திலிருந்த பொதுமக்கள் லத்தி வீசிய போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து  தென்சங்கம்பாளையம்-கோட்டூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: