நாகர்கோவிலில் சூரசம்ஹாரம் திருவிழாவில் வெடிவிபத்து: 2 சிறுமிகள் உள்பட 4 பேர் காயம்

நாகர்கோவில்: நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் நடந்த சூரசம்ஹார விழாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பெண்கள் படுகாயமடைந்தனர். நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள வினாயகர் தெருவில் பார்வதி உடனுறை பரமேஸ்வரன் கோயிலில் நேற்று மாலை சூரசம்ஹார விழா நடந்தது. இதையொட்டி கீழத்தெரு மற்றும் தெற்கு ரத வீதி சந்திப்பில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது.  இதைக்காண  100க்கும் மேற்பட்ட பெண்கள் இருபுறமும் திரண்டிருந்தனர்.

அப்போது பெண்கள் கூட்டத்திற்கு இடையே தீப்பிழம்பு போல் பட்டாசு ஒன்று கீழே விழுந்து வெடித்து சிதறியது. கூடியிருந்த பெண்கள், சிறுமிகள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். இதில் லெட்சுமி (69) என்ற முதாட்டியின் வலது கை முற்றிலுமாக சிதைந்தது. மேலும் அமுதா, அவரது மகள் கௌசிகா (12), மற்றொரு சிறுமி ஆகிய 4 பேருக்கு  காயம் ஏற்பட்டது. இதில் கௌசிகாவுக்கு பின்னந்தலை, முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரையும் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு தடயவியல் துறையினர் வந்து ஆய்வுகள் செய்தனர். அப்பகுதியில் உள்ள வீட்டு மாடியில் வைக்கப்பட்ட வாணவேடிக்கை பட்டாசு தவறுதலாக கீழேவிழுந்து வெடித்து இருக்கலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து, பிளாஸ்டிக் துகள்களை போலீசார் சேகரித்து செய்து வருகின்றனர்.

Related Stories: