இரட்டை ஆதாய பதவி விவகாரம்: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்

புதுடெல்லி: இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரிய நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின், டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் ராகுல் டிராவிட் துணை தலைவராக இருந்து வருகிறார். இதனால் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக அவரை நியமித்தது இரட்டை ஆதாய பதவி வகிக்கும் பிரச்சினை என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் டிராவிட்டிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு டிராவிட் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். அதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் நீண்ட விடுப்பில் இருக்கிறேன் என்றும் தனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் மீண்டும் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில் வருகிற 12-ந் தேதி டெல்லியில் நேரில் ஆஜராகி மேலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: