தேவர், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உரியவர்: ராமசுப்பிரமணியன் புகழாரம்

பெங்களூரு: தேவர், குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் அல்ல: ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் உரியவர் என ராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார்.பெங்களூரு கலாசிபாளையத்திலுள்ள கர்நாடக தேவர் சங்க அலுவலகத்தில் தேவர் மற்றும் மருது சகோதரர்கள் குரு பூஜை நடந்தது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவர் மற்றும் மருது சகோதரர்கள் திருவுருவ படத்திற்கு சங்கத் தலைவர் பாபு கே தேவர், துணை தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர்  வெள்ளத்துரை, செயலாளர் மணிகண்டன் (டீ மணி), மாநகராட்சி கல்வி நிலைக்குழு முன்னாள் தலைவர் தன்ராஜ், இளைஞரணி தலைவர் மனோகர்  மற்றும்  முன்னாள் நிர்வாகிகள் போஸ், கந்தன், ஆறுமுகம் உள்ளிட்ட  சங்க உறுப்பினர்கள் பலர்  மலர் தூவி வணங்கினர்.  

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இலக்கிய பேச்சாளரும், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் நிர்வாகியுமான ராமசுப்பிரமணியன் பேசுகையில், “சுபாஷ் சந்திரபோசின் தேசிய படையில் இளைஞர்கள் சேர்வதற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முக்கிய காரணமாக இருந்தார். அவரின்  எழுச்சி மிகு உரைகள், தன்னலமற்ற தொண்டுகள் அவரை மாபெரும் தலைவராக மாற்றியது. சுபாஷ் சந்திர போஸ் பெயர் நிலைக்கும் வரை தேவரின் புகழும் நீங்காமல் நிலைத்திருக்கும் என்பது உறுதியாகும். தேவர், மாபெரும் தலைவர். அவரை  ஒரு குறிப்பிட்ட ஜாதி வட்டத்தில் சேர்த்துவிடக்கூடாது.  ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும்  உரியராவார் என்றார்.

Related Stories: