சென்னை: சிறுவன் சுஜித் மரணம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். விஷால் கூறும்போது, ‘சுஜித்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் இனி தொடராது என நம்புவோம்’ என்றார். வீடியோ மூலம் இரங்கல் கவிதை வெளியிட்ட பாடலாசிரியர் வைரமுத்து, ‘உன்னை மீட்கக் கையில் கயிறு கட்டிப் பார்த்தோம். ஆனால், உன் கால் விரலில் கயிறு கட்டி விட்டதே மரணம். எவன் அவன் பின் கூட்டிப் பிறந்த குழந்தைக்கு, முன்கூட்டியே சவக்குழி வெட்டியவன். உலகின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ, நடக்கக் கூடாதது நடந்தேறிவிட்டது. மரணத்தில் பாடம் படிப்பது மடமை சமூகம். மரணத்திலும் கல்லாதது அடிமை சமூகம். ஏய்.. மடமை சமூகமே.. வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில், மரணத்தின் பக்கவிளைவு ஞானம் தானே. அந்த சவக்குழிக்குள் மண் விழுவதற்குள், அத்தனை அபாய குழிகளையும் மூடிவிடு. அந்த மெழுகுவர்த்தி அணைவதற்கு அத்தனை கண்ணீரையும் துடைத்துவிடு. ஏய் வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, சற்று குனிந்து பாதாளம் பார். இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்’ என கூறியுள்ளார்.