துபாய்: கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் அணுகியது குறித்து ஊழல் தடுப்புக் குழுவினருக்கு தகவல் தரத் தவறியதால், வங்கதே அணி கேப்டனும் ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் 1 ஆல் ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஊழல் தடுப்புக் குழு விதிமுறைகளின்படி, சூதாட்ட தரகர்கள் அணுகி பேரம் பேச முயற்சித்தால் அது குறித்து சம்பந்தப்பட்ட வீரர் உடனடியாகத் தகவல் தர வேண்டும். 2018ல் வங்கதேசம், ஜிம்பாப்வே, இலங்கை அணிகளிடையே நடந்த முத்தரப்பு தொடர், 2018 ஐபிஎல் சீசனில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகளிடையே நடந்த போட்டியின்போது ஷாகிப் அல் ஹசனை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். இது குறித்து அவர் ஊழல் தடுப்புக் குழுவுக்கு தகவல் தரத் தவறிவிட்டார். இது தொடர்பாக ஐசிசி நடத்திய விசாரணையில் தனது தவறை ஷாகிப் ஹசன் ஒப்புக்கொண்டதை அடுத்து, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி நேற்று அறிவித்தது.