வாஷிங்டன்: கூட்டாளிகள் காட்டிக்கொடுத்ததாலேயே ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாத்-ன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு துருக்கி ராணுவத்திடம் இஸ்மாயில் அல் இதாவி என்ற பாக்தாதியின் உதவியாளர் சிக்கினான். இருப்பிடத்தை தவிர்க்கும் வகையில் காய்கறி ஏற்றி செல்லும் வண்டியில் பாக்தாதி, ஐ.எஸ்.தீவிரவாதிகளை சந்திக்கும் தகவல் இஸ்மாயில் மூலம் தான் அமெரிக்க படைக்கு கிடைத்தது. இதுதவிர ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிரான அல்-ஷாம் என்ற இயக்கமும் பாக்தாத்தின் நடமாட்டம் குறித்து தகவல் அளித்து வந்தது. இவற்றின் அடிப்படையில் தான் பாக்தாத்-ன் இருப்பிடத்தை அமெரிக்க படை நெருங்கிய போது வெடிகுண்டு வெடிக்க செய்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த தகவல்களில் எது உண்மை என்பது உறுதி படுத்தப்படவில்லை.