அடிலெய்டு: இலங்கை அணியுடன் நடந்த முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 134 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.அடுலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவரில் 122 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.பிஞ்ச் 64 ரன் (36 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சந்தகன் பந்துவீச்சில் குசால் மெண்டிஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வார்னர் - மேக்ஸ்வெல் இணைந்து இலங்கை பந்துவீச்சை சிதறடிக்க, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் எகிறியது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்து மிரட்டினர்.மேக்ஸ்வெல் 62 ரன் (28 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஷனகா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் குசால் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வார்னர் சதத்தை நிறைவு செய்ய, ஆஸ்திரேலியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 233 ரன் குவித்தது. வார்னர் 100 ரன் (56 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), டர்னர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.