கிணத்துக்கடவு: கோவை அடுத்த வடசித்தூரில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இன்று மயிலந்தீபாவளி கொண்டாடப்பட்டது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம் உள்ளிட்ட கிராமங்களில், இந்து மற்றும் முஸ்லிம் குடும்பத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி தீபாவளி கொண்டாடி வருகின்றனர். இதை ‘மயிலந்தீபாவளி’ என்று அழைக்கிறார்கள்.இவர்கள் உறவினர்கள்போல் பழகி வருவதால் ஆண்டுதோறும் மயிலந்தீபாவளியில் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர். இதற்காக இன்று (திங்கள்) வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ராட்டிணங்கள் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், இனிப்பு, பலகார கடைகள், வளையல் கடைகள், அமைக்கப்பட்டு ஊரே திருவிழா கோலம் பூண்டிருந்தது. வடசித்தூர் பகுதியில் வசிக்கும் இந்து, முஸ்லிம் மதத்தினர் ஒற்றுமை உணர்வுடன் மயிலந்தீபாவளியை கொண்டாடி மத்தாப்பூ, பட்டாசு, சரவெடி வெடித்து மகிழ்ந்தனர்.