நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை : நவம்பர் 1ம் தேதியை, தமிழ்நாடு நாள்., என்று கொண்டாட நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர்-1ம் நாள் ‘தமிழ்நாடு நாள்’’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின விழாவ உரையில் தெரிவித்திருந்தார். 1956-ம் ஆண்டு, தமிழ்நாடு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்ததில் இருந்து சென்னை மாகாணம் தமிழ்நாடு ஆனது.

1956ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டதை, பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதியினை தமிழ்நாடு நாள் என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் மொழிக்காவலர்கள், மற்றும் தமிழறிஞர்களையும் சிறப்பிக்கும் வண்ணம் விழா எடுத்து சிறப்பிக்கவும் முடிவு செய்திருக்கிறது. மேலும், இளைய சமுதாயம் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையில் கவியரங்கங்கள், பட்டிமன்றம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுக்க ஏதுவாக, 10 லட்சம் ரூபாய் நிதியினையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

Related Stories: