இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர், தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் பாடகி ரபி பிர்ஜடா. இவர் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்துவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு பிரபலமானவர். கடந்த ஆகஸ்டில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பாடகி ரபி பிர்ஜடா, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அதில், 4 மலைப் பாம்புகள் உட்பட எண்ணற்ற பாம்புகள் மற்றும் முதலையுடன் தான் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும், பிரதமர் மோடி மீது இவற்றை விட்டு தாக்குதல் நடத்துவேன் என்றும் பதிவிட்டு இருந்தார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ரபி பிர்ஜடாவுக்கு எதிராக லாகூர் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.